வேலு.சாந்தமூர்த்தி

புரையோடிய புரிதல்கள் – வெ. இறையன்பு

நெல்சன் மண்டேலா தன்னுடைய சுயசரிதத்தில் எழுதியிருக்கிறார்.

ஒருமுறை அவர் விமானத்தில் பயணம் செய்யும்போது அதை ஓட்டிச்சென்ற மாலுமி ஒரு கறுப்பர் என்பது தெரிந்ததும், அவர் சற்றுப்பயந்துவிட்டார். விமானத்தை அவர் சரியாக ஓட்டுவாரா விமானம் விபத்துக்குள்ளாகுமோ என்றெல்லாம் கூட அவர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்து, ”அடச்சே” என்ன காரியம் செய்து விட்டோம். நாம் எந்த இலக்குக்காகப் போராடி வருகிறோமோ அதற்கு எதிராக நாமே இப்படிச் சிந்திக்கலாமா? என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

இன்னொரு முறை ஓரிடத்தில் வெள்ளைக்காரப் பெண்மணி பிச்சையெடுப்பதைப் பார்க்கிறார். அவளுக்கு அதிகப் பிச்சையிடுகிறார். பல கறுப்பின மக்கள் பிச்சையெடுப்பதைப் பார்த்து ஒன்றும் தோன்றாத அவருக்கு ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியை அப்படிப் பார்த்ததும் அந்தப் பரிதாப உணர்வு ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.

அவரையும் அறியாமல் அவர் ஆழ்மனத்தில் வெள்ளை நிரத்தின் மேன்மையைப் பற்றிய எண்ணம் ஊடுருவிப் பாய்ச்சப்பட்டிருந்ததுதான் இந்த நிகழ்வுக்கு காரணம்.

சில நேரங்களில் நாம் யாரை எதிர்த்துப் போட்டியிடுகிறோமோ, அவர்கள் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் நமக்கு ஆழ்மனத்தில் பதிந்துவிடுவதுண்டு.

நாம் ஆழ்மனத்தில் பதிந்த பதிவுகளை நாம் உதிர்க்க முடியால் தவிக்கிறோம்.

வெள்ளை நிரத்திலிருப்பவர்களே அழகு என்றும்

ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவு ஜீவிகள் என்றும்

வெளிநாட்டு முத்திரை குத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் உயர்தரமானவை. நம்நாட்டு பொருட்கள் மலிவானவை என்ற எண்ணங்கள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன.

நம்முடைய பொருட்கள் உயர்ந்தவை என்று நாமே நம்பாதபோது மற்றவர்களை எப்படி நம்பவைக்கப் போகிறோம்?

மேல்மனத்தைக் காட்டிலும் உள்மனம் வலிமை வாய்ந்தது. சரியாகச் சமைக்கப்படாத புதுவகை உணவை முதல் முறை உட்கொள்ளும்போது ஜீரணமாகாவிட்டால் நம் ஆழ்மனம் அது குறித்த எதிர்மறைக் கருத்தைப் பதிவுசெய்து கொள்கிறது. அடுத்தமுறை சரியாகச் சமைத்திருந்தாலும் ஆழ்மனத்தின் பதிவு நமக்கு அஜீரண கோளாறை ஏற்படுத்திவிடுகிறது.

அதனால்தான் நாம் நல்ல சிந்தனைகளையே நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். நல்லவற்றையே தொடர்ந்து எண்ணும்போது ஆழ்மனத்தைத் தூண்டி அவை நமக்கு ஆற்றலையும், உந்து சக்தியையும் தருகின்றன.

ஒரு தேர்வை எழுதுவற்கு முன்பே ஆது சிரமம் என்று பயப்பட ஆரம்பித்தால் அது எதிர்மறையான பதிவுளை ஏற்படுத்திவிடும்.

இந்திய எல்லைப்பகுதிகளுக்குச் சென்றபோது, அங்கு கிடைத்த, கொட்டிக் கிடந்த வெளிநாட்டுப் பொருட்கள் வாங்க முனைந்தனர். தெரிந்த நபர் ஒருவர் தென்பட்டார்.

அவரிடம் அவர்கள் “எங்களுக்கு வெளிநாட்டுப் பொருட்கள் வேண்டும்” என்றார்கள்.

வெ. இறையன்பு

“எந்த நாட்டு பொருள் வேண்டும்”? என்றார்.

“எந்த நாட்டுப் பொருளும் கிடைக்குமா?”

”எல்லா நாட்டு பொருட்களையும் நாங்கள் செய்துதரத் தயார்” என்றார் அவர்.

மாலன் – அணிந்துரை

தமிழில் பயணக் கட்டுரை நூல்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால், பயணங்களை வரலாற்றுக் கோணத்தில் அணுகுகிற நூல்கள் அநேகமாக இல்லை.

அந்தக் குறையைப் போக்கும் வித்தியாசமான நூல் இது.

பயணக் கட்டுரை என்பது பெரும்பாலும் ஒரு நாட்டிற்கு அல்லது இடத்திற்குச் சென்று வந்த அனுபவத்தை, அங்கு கண்டவற்றையும் உண்டவற்றையும் பற்றி பேசுகிற சுய அனுபவப் பதிவுகளாக அமைந்திருக்கும்.

ஆனால், இந்த நூல் பயணத்தை வரலாற்றின் வெளிச்சத்தில் அணுகுகிற நூல். நாம் அன்றாடம் உண்ணுகிற உணவு, தினம் தினம் காண்கின்ற விலங்குகள், பறவைகள், தாவரங்கள், வாசித்து மகிழ்ந்த இலக்கியம், கேட்டு நெகிழ்கிற இசை, பல பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஏன் சில விழுமியங்களே கூடப் பயணங்கள் நம் மீது ஏற்படுத்திய மாற்றங்களின் விளைவாக நேர்ந்தவை. அந்தப் பயணங்கள் நேற்றோ அல்லது நெடுங்காலத்திற்கு முன்போ நிகழ்ந்தவையாக இருக்கலாம்.

சுருக்கமாக சொல்லப்போனால் அறிவியலுக்கு நிகராக வாழ்வின் மீது தாக்கங்களை ஏற்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வந்த சிறப்பு பயணங்களுக்கு உண்டு.

மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை எண்ணிப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். இருக்கிறது. அதை திரு. இறையன்புவின் வழி தரிசிக்கும் போது அந்த ஆச்சரியம் பல மடங்காக விரிகிறது, தொலைநோக்கியின் வழியே நட்சத்திர மண்டலங்களைப் பார்ப்பது போல. அதே நேரம் அவை சிந்தனையையும் தூண்டுகின்றன, ஒரு நுண்ணுயிரை சூட்சம தரிசினியின் மூலம் காண்பதைப் போல.

அது திரு. இறையன்புவின் சொல்லிற்குள்ள வலிமை. கவிதையானாலும், கதையானாலும், கட்டுரையானாலும், உரையானாலும், ஒன்றை ஒரே நேரத்தில் விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கும் ஆற்றல் அவருக்குண்டு. நிறைய விவரங்களை எண்ணற்ற ஓவியங்களில் சித்தரிக்கும் மொகலாயச் சிற்றோவியங்களை (Mughal Miniatures) போன்றது அவரது அணுகுமுறை.

சுவாரசியமும், விவரிப்பும் ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கற்பனை மட்டுமல்ல உண்மைகளும் கூட சுவாரஸ்யமாக இருக்க முடியும். அதற்கு இந்த நூலே சாட்சி.

இந்த ஒரு புத்தகத்தை படிப்பதன் மூலம் நீங்கள் பல புத்தகங்களைப் படித்த பயனைப் பெற முடியும் என்பது உறுதி. ஏனெனில் திரு. இறையன்பு இந்தக் கட்டுரைகளை எழுத மேற்கொண்ட முயற்சியின்போது பல நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். குறிப்புகள் எடுத்துக் கொண்டார். அந்தக் குறிப்புகளை மற்ற நூல்களோடு ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொண்டார், பின்னர்தான் அவற்றை உரிய இடத்தில் உரிய முறையில் கட்டுரைகளில் பயன்படுத்தினார்.

இந்தக் கட்டுரைகளை எழுத அவர் மேற்கொண்ட உழைப்பு அசாத்தியமானது, வணங்கத்தக்கது. அரசுப் பணியில் ஒரு மிக உயர்ந்த பொறுப்பில் பல பணிகளை ஆற்ற வேண்டிய சூழலில் இருந்தபோதிலும் இதற்கென முக்கியத்துவம் கொடுத்துத் தேடித் தேடி படித்து உழைத்து இந்தக் கட்டுரைகளை அவர் நமக்குத் தந்தார். அதற்கு ஒரே ஒரு காரணம்தான். அது அவர் ‘புதிய தலைமுறை’ யின் மீது வைத்திருந்த அன்பு. அதற்குத் தலை வணங்குகிறோம்.

‘புதிய தலைமுறை’ வார இதழில் 45 வாரங்கள் வெளிவந்த கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெறுகின்றன. வித்தியாசமான முயற்சிகளை வளர்த்தெடுப்பது என்பது ‘புதிய தலைமுறை’ யின் நோக்கங்களில் ஒன்று. ‘புதிய தலைமுறை’ யே ஒரு வித்தியாசமான முயற்சிதான். நான் முன்பு சொன்னது போல இந்த நூல் இதுவரை தமிழில் அதிகம் இல்லாத வகையைச் சேர்ந்த நூல். இதனை வெளியிடுவதில் புதிய தலைமுறை மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது.

Malan – மாலன்

Random Thoughts – N.RAM – Foreword

‘Random Thoughts’ is a collection of 51 essays written by Thiru.V.Irai Anbu, a senior I.A.S. officer of Tamil Nadu under a fortnightly column in the  Madurai edition of THE HINDU Metroplus over 100 weeks.

For V.Irai anbu who is famous for his writing and oratorical skills in Tamil, this was a maiden sally into popular English writing. He chose his topics at random, from nature and human behavior.  Each essay of about 600 words contains words of wisdom from a man who has unquestionable depth of knowledge. ‘Random Thoughts’ is not an exercise in pontification but a portrayal of human behavior and beliefs.

V.Irai anbu in ‘Random Thoughts’, attempts to help the reader visualize abstract qualities through appropriate use of metaphor and imagery.  All the essays are laced with subtle humour  that has a functional use.  They need not be read as a philosophic treatise but as a common man’s observations of  human nature. It is like standing in front of a mirror and laughing at one’s own deficiencies.

Each work carries a distinct stamp: alliteration. A person famous for the musical use of Tamil in speech and writing has attempted it in English too, with considerable success. “When the mundane disappears,  the sublime surfaces.  We smell the extraterrestrial aroma and hear the extraordinary concert.  We stumble upon super consciousness and communicate sans world, sings and gestures.”

He has consciously chosen the simple sentence for structuring his work.  This structural device has helped him to load each sentence with meaning and also make the reader pause and contemplate on what he has read. “There is nothing called non-violent  revenge.  The very thought to attack is violent.  Pregnant anger is worse than delivered action”. No doubt the column attracted readers of all ages.

THE HINDU take pride in publishing the “Random Thoughts” of V. Irai anbu, which I am sure would be  cherished as a prized possession by the readers.

தாமிரச் செப்பில் திரட்டிய கங்கை

தாமிரச் செப்பில் திரட்டிய கங்கை

சிற்பி பாலசுப்பிரமணியம்

யிரில் முளைத்த சிறகு காதல். அது ஓசையில்லாத சலனம். ஆனால் உயிரை இயக்கும் அசைவு.

வாழ்வின் ஒவ்வொரு துளியையும் வைரக்கற்களாய் ஒளிவிடச் செய்யும் கிரணம். வண்ணங்களின் உறைவிடம். ஆனால் அதில் சற்றே பிசகு நேர்ந்தால் ஒரே வண்ணம் – கருப்பு.

உலகில் காதல் இலக்கியங்கள் இல்லாத மொழியே இல்லை. எழுத்து இல்லாத மொழியில் கூடக் காதல் உண்டு. அதன் உன்னதமே மொழியையும் தாண்டி வாழும் அதன் நுண்ணிய ஆற்றல்.

சேக்ஸ்பியரின் காளிதாசன் வரை பைரனிலிருந்து பழநி பாரதி வரை அதன்மாய அழகில் ஈடுபடாத கவிஞர்கள் எவரும் இலர்.

சிந்தனைகளைக் கருத்தரித்துச் சொற்களில் தாலாட்டி விடும் இறையன்பும் அதில் கரைந்து போனதன் விளைவு;  ‘வைகை மீன்கள்’.

*

வைகை மீன்களை’த் தந்தவர் முன்பு ‘வாய்க்கால் மீன்களைத்’ தந்தவர்தான். ஆனால் இந்தத் தலைப்பில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. நீரோட்டம் குறைந்த வைகையில் மீன்கள் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே அந்தத் தவிப்பு இந்தக் கவிதைகளின் கடைசிச் சொல் வரையிலும் இரத்தத்தின் அணுக்களைப் போல் பரவிக் கிடக்கிறது.

அவனும் அவளும் தவிப்பின் எல்லையைத் தொடும் பயணமே  ‘வைகை மீன்கள்’.

உயிர்ப்புமிக்க இக்காதல் கவிதைகளின் நாயகன் யாராக இருக்கலாம் என்று வாசகன் மனமும் தவிக்கிறது. அவன் அவரே தானோ? அவரைப் போல்தான் கனிவு, கண்டிப்பு, கட்டுப்பாடு, கருத்துள்ள வாழ்க்கையை அவன் மேற்கொண்டிருக்கிறான்.

அவராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது எப்படி இருந்தாலும் இந்தக் கதைக்குள் தன் வரலாற்றுக் கீற்றுக்கள் தென்படுகின்றன என்பதில் ஐயமில்லை. இந்த அடையாளம் பாரதியின் சுயசரிதைக் கவிதை போல ஓர் அர்த்தச் செறிவை நமக்குள் ஏற்றி விடுகின்றது,

அந்த வகையில் – எளிமையில் வலிமையை உள்ளடக்கிய இச்சிறு காவியம் ஒரு தன் வரலாறு தழுவிய படைப்பு ( Autobiographical Narrative Poem) என்ற கனத்தையும் பெருமையையும் பெறுகிறது.

*

அவன் சராசரி மனிதர்களிலிருந்து வேறுபட்டவன். போலிகளை முகப் பூச்சுகளுக்கும் ஒப்பனைப் பேச்சுக்களுக்கும் அப்பால் அடையாளம் காண வல்லவன். வெளித் தோற்றங்களின் உள்ளே இருக்கும் சூனியத்தை அவனால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஒரு பள்ளிக்கூடத்தில் உரையாற்றப் போகும்போது அந்தப் பள்ளியின் கட்டடங்களைக் கண்டு அவன் பிரமிப்பதில்லை.

‘கட்டடஙகளின் அடர்த்தி

அதிகமாகும்போது

ஆத்மாக்கள் காணாமல் போய்விடுகின்றன’

என்பதைப் புரிந்து கொண்டவனாகிறான். கல்வி  ‘வர்த்தகம்’ ஆகிவிட்டது குறித்து அவன் கவலை அவனைத் தனித்து அடையாளம் காணச் செல்கிறது.

ஆண்டு விழாவில் காணும் செயற்கைத் தனம் அவனுக்கு எரிச்சலூட்டுகிறது. அங்கு நிகழும் அறிமுக நாடகம் அலுப்பூட்டுகிறது.

‘ஒரு குறும்படத்தில் நடித்த

சலிப்பு’

அவனுக்கு,

அங்கே அந்த நெடும் பாலையில் – அவன் தன் கருத்துச் செறிந்த உரையால் பசுமையை விதைக்கிறான், என்ன வியப்பு! அங்கே ஒரு பசுமை எதிர்பாராமல் ஏற்கெனவே அங்கே காத்திருந்தது.

தொகுப்புரை வழங்கும் அவள் – அவனுடைய மாணவப் பருவத்தை மணமூட்டி மகிழ்வித்த மருக்கொழுந்து.

‘கவிதைக்கே கால் முளைத்தது மாதிரி’ இருந்த அவள், கவிதையும் வாசித்தாள். அதே தருணம் அவனுடைய இதய வீணையையும் வாசித்தாள். ஆனால் நேசித்த மங்கை மின்னலைப் போல மறைந்து காணாமல் போய்விட்டாள்.

இருபதாண்டுகளுக்குப்பின் இப்போது நினைவுச் செடியில் புதிய பூ.. இல்லை இல்லை பழைய பூவின்… இல்லை இல்லை நம்பிக்கைப் புதுப்பூ.

இதற்கிடையில் அவன் இரக்கத்தால் செய்த திருமணம் – முதல் மனைவியின் அரக்கத் தனத்தால் தோற்று மன முறிவில் மண முறிவாகி விடுகிறது.

மீண்டும் சந்தித்த காதல் கவிதை அவனை உண்ணவிடாமல், உறங்க விடாமல் அலைக்கழிக்கிறது. இன்னும் திருமணமாகாத அவளை எப்படித் தன் உயிருக்குள் பொதிந்து வைப்பதென மனக்குழப்பம்.

ஒவ்வொரு சந்திப்பும் அவன் காதலில் அமுதம் ஊற்றுகிறது. ஆனாலும்,

‘அவளுக்கு நம்மீது இருப்பது

நட்பா? நேசமா?’

என்ற கேள்விக்குறிகள் அவனை முள்வேலிக்குள் சிறைப்படுத்துகின்றன எப்படி?… எப்படி?…. என்னை உணர்த்துவது?’

மறைமுகமாக அவளுக்குத்  ‘திருமணம் தனிமையைத் தவிர்க்குமே’ என்று பொத்தாம் பொதுவில் சொல்லியும் பார்க்கிறான் அவன்…..

பதில் மோனாலிசாவின் உறைந்த புன்னகை, இதற்கு ஆயிரம் உரைகள் எழுதலாம், எதிர்பார்த்த பொருள் இருக்குமா? இல்லையா?

அவன் பரவவிட்ட அதிர்ச்சி அலைகளால் அவளும் உறங்கவில்லை. அவள் பெண்ணில்லையா? பெண்களுக்கு எச்சரிக்கை விளக்கெரிக்கும் மின்சாரம் இயற்கையாகவே இருக்கிறதே…

‘வேண்டாம், வேண்டாம்..

கற்பனை மரநிழலில் கணிசநேரம் தங்கினால் கூட

யதார்த்த வெயில் சுடும்போது

கருதி விடுவோமே!’

என்று தவிப்புக்கு ஒரு முடிவு காண யத்தனிக்கிறது அவள் உள்ளம்.

தவிப்புகள் கனமாகி இமயமலையை இதயத்தின் மேல் ஏற்றுகிற தருணத்தில் ஒரு கவிதை நூலின் சமர்ப்பண வரிகள் அதல பாதாளத்தில் விழுந்த காதலைக் கரையேற்றி விடுகின்றன.

‘கை குலுக்கிப் பிரிவாளோ

கை பிடித்துத் தொடர்வாளோ

எனத் தெரியாத என்னுயிர்த் தோழிக்கு

காணிக்கை’

என்பது சமர்ப்பணம். அந்த நான்கு வரிகளால் நான்கு விழிகள் மீண்டும் சந்திக்கின்றன. காதலைக் கனிவு மிகுந்த இல்லற வாழ்வுக்கு அர்ப்பணிக்கின்றன.

உணர்கவுளின் அரங்கங்கள் அந்தரங்களுக்குள் ஆழ்ந்து அமைதியில் முத்துக் குளிக்கும்அனுபவமாகி விடுகிறது இறையன்புவின் இதயத்தை வருடும் இந்த நூலில்…..

*

இது காதலைத் துகிலுரியும் துச்சாதனர்களின் காலம், எழுத்துக்களால் இளம் மனங்களைக் காமவேள் நடன சாலைகள் ஆக்கும் காலம். அதைக் கலையின் பெயரால் நியாயப்படுத்தும் காலம். அதை எழுத்துச் சுதந்தரம் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றும் காலம். மெல்லிய வீணைத் தந்திகளைச் சம்மட்டியால் மீட்டி, இது தான் இசை என்று நம்ப வைக்கும் காலம்.

இதோ இறையன்பு பூசை அறையில் அர்ச்சனைக்கு வைக்கப்பட்ட பனி படர்ந்த பூவைப் போல் ஒரு காதல் கதையை, கவிதை என்ற வெள்ளித் தட்டில் வைத்து வழங்குகிறார்.

தகிக்கும் வெட்டவெளி வெம்பரப்பிலும் கண்ணாடி நீர் ஊற்று ஒன்று கண்விழித்தல் சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார்.

*

வெறும் காதல் கவிதையாக மேகங்கள் இன்றி வெறிச்சோடும் வானமாக இந்தச் சிறுகாவியம் அமைந்து விடவில்லை.

ஒவ்வொரு பக்கத்திலும் சிந்தையை அள்ளும் சிந்தனைகள் ஒரு விளைந்த நெல்வயல் போல் தங்கத்தைக் கொட்டிக் காத்திருக்கின்றன.

விளம்பரத்துக்காகவும் பொருள் சம்பாதிப்பதற்காகவும் ஆன்மா இல்லாத கல்லறைகளாகப் பெருகும்கல்வி நிறுவனங்களைக் குறித்து இறையன்பு எழுதுகிறார்.

‘இவர்கள் கல்விக் கண்ணைத் திறக்கிற அவசரத்தில்

ஞானக் கண்ணை தோண்டி விடுகிறார்கள்

மூளையைப் பலப்படுத்தும் முனைப்பில்

இதயத்தைப் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்’

பொய்முகங்களோடு செய்யப்படும் உபசரிப்பும், அளிக்கப்படும் பூங்கொத்துக்களும் அருவருப்பாய்ப் படுகிறது.

‘கைகளில் கொடுக்கப்படுவது

காதுகளில் வைக்கப்படுவதற்கு

முன்னோட்டம் தான்’

என்கிறார் கவிஞர்.

கல்வி எது என்ற கேள்விக்கு அழுத்தமாகக் கிடைக்கும் இறையன்புவின் கச்சிதமான பதில் இளைஞர்களைச் சிந்திக்க வைக்கக் கூடியது.

‘அறியாமையை அறிவதே

கல்வியின் முதல்படி

அறிந்தவை அனைத்தும்

அறியாமையே

என்பதே அதன் கடைசிப்படி’

என்ற வரிகளில் படிப்பின் படிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன.

உவமைகளும் உருவகங்களும் பருத்திப் பூப்போல் வெடித்துக் குலுங்குகின்றன நூல் முழுவதிலும்.

காதல் மனம் முழுதும் நிறைந்து கனப்பதைக் குறித்து கவிஞர் சொல்கிறார்.

‘மடியிலிருக்கும் பாலாய்

அவன் கனவுகள் காத்திருந்தன’

மொழியைப் பற்றி, மொழி பயில்வது பற்றி ஓர் உருவகம்:

‘மொழியே பாத்திரம்..

உறிஞ்சியவர் வாயின் அமைப்பே

உரிய பாத்திரத் தேர்வுக்கு இலக்கணம்’

இளமையிலே முற்றி முதிர்ந்த அறிவு பெற்றிருந்த கண்ணகியை இளங்கோ  ‘சிறுமுதுக்குறைவி’ என்று சிறப்பித்திருப்பார். அதுபோல் இந்தக் கதையில் வரும்  ‘அவனு’ டைய முதிர்ச்சியை,

‘இருபத்தைந்து வயதிலேயே

கருத்துக்களில் நரைத்திருந்தான்’

என்கிறார் இறையன்பு.

தோற்றுப்போன திருமணத்தை  ‘நிழல்களின் சங்கமம்’ என்கிறார்.

தனக்காகக் காதலி வாசலிலேயே காத்திருப்பதை  ‘வாசலிலேயே கால்கள் வேர்விடுமளவு காத்திருந்தவள்’  என்று நிறங்களின் மெருகேற்றிச் சொல்கிறார்.

இரண்டு பேருமே காதலை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் நாகரிகம் காக்கின்றனர். இந்தப் பண்பாட்டைச் சொல்லும் இறையன்பு

‘உள்ளம் ஒருவரையொருவர்

எண்ணும் போதே உற்சாகத்தில்

துள்ளிக் குதித்தாலும்

உதடுகளில் கடிவாளமிட்டு

உணர்வைக் கவாத்து செய்தனர்.’

என எல்லைகளைக் காக்கும் ராணுவ வீரனைப் போல கவனமாகச் செயல்படுகிறார்.

இந்தக் காதல் காவியத்தினூடே அடிஅடியாய், அணு அணுவாய்ப் பயணம் செய்யச் செய்ய வாசக நெஞ்சில் இறுக்கமும், அழுத்தமும் கூடிக்கொண்டே போகின்றன… என்ன நேரும் என்ன நேரும் என்பதாக….

ஜார்ஜ் சிமனான் என்ற பிரெஞ்சு நாவலாசிரியரின் கதை சொல்லும் நேர்த்தி எப்படியிருக்கும் என்பதைச் சொல்லும்போது இப்படிச் சொல்லுவார்கள்… “கதையின் முடிவு நமக்குத் தெரியும், ஆனாலும் ஒரு பரபரப்பு. ரயில் வருகிறது என்று தெரிந்தாலும் அது நெருங்க நெருங்கப் பிளாட்பாரத்தில் ஏற்படும் பரபரப்பு போல…” என்பார்கள்.

இறையன்புவின் கதை நிகழ்த்தும் நேர்த்தியும் அதற்கு நிகரான பரபரப்பை உண்டு பண்ணுகிறது. தாமிரச் செம்பில் வைத்த கங்கை நீராய்ப் பரிசுத்தம் தாங்குகிறது  ‘வைகை மீன்கள்’.

இரும்புச் சட்டமாக இருக்கும் இந்திய ஆட்சிப் பணியில் இதயம் உள்ள மனிதராக விளங்கும் இறையன்புவை நான் எப்போதும் நேசித்து வந்திருக்கிறேன். இதோ இந்த முன்னுரை எழுதும் வாய்ப்பைத் தந்து அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை அளித்து விட்டார்.

இறையன்புவுக்கு என் நெஞ்சின் நிறைய அன்பு.

*

இறையன்புவின் நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் நற்பணிக்காக விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.

சிற்பி பாலசுப்பிரமணியம்

பொள்ளாச்சி

20.8.09

‘ஆத்தங்கரை ஓரம்’ – திரு.ஜெயகாந்தன் அவர்களின் அணிந்துரை

‘ஆத்தங்கரை ஓரம்’ என்ற இந்த நாவல் சிந்தூர் என்ற கிராமத்தின் அழகையும் அதனுடே நிகழ்ந்த அவலங்களையும் மனிதாபிமான நோக்கில் சித்திரிக்கின்ற கதை.

பெயரில்லாத அந்த ஆற்றில் பெரியதொரு அணை கட்டத் திட்டமிடப்படுகிறது. கதையில் அந்த அணை கட்டும் முயற்சி திடீரெனத் தோன்றுகிறது. அரசாங்கமும் அதிகாரிகளும் சிந்தூர் கிராமத்தை அழித்தொழிக்கிற நோக்கம் தவிர வேறெந்த நன் நோக்கமும் இல்லாமற் செயற்படுகிறார்கள். நகரங்கள் வாழும் இடங்களோ என்ற ஐயப்பாட்டினை ஏற்படுத்துகிறது. அதிகாரிகள் என்போர் அரசாங்கச் சம்பளத்துக்காக அடிமைப்பணி புரிகிறவர்கள். சமயமுளபடிக்கெல்லாம் பொய்கூறி அறன் கொல்லும் சுமடர்கள். இவர்கள் மத்தியில் நல்லிதயமும் நற்பண்புகளும் கொண்ட சுதீர் போன்றவர்கள் நாளடைவில் நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு ஒதுக்கப்படுவர். என்னதான் மக்களைத் திரட்டி வன்முறை தவிர்த்து அறவழியில் போராடினாலும் அரசாங்கத்தின் மூர்க்கத் தனத்தோடு அதன் திட்டங்கள் நிறைவேறும். இறுதிவரை அதை எதிர்த்தவர்கள் ‘இதுவே கடைசி அணை’ என்ற சுய திருப்தி அடைந்து, அடுத்து இன்னொரு இத்தகையதொரு முயற்சியை எதிர்த்து அணி திரட்டிப் போய்விடுவர்.

இந்த யாதார்த்த நிலையை அடிப்படையாகக்கொண்டு மிகவும் மேன்மையாக எழுதப்படிருக்கும் இந்த நாவல் தமிழில் எழுதப்பட்ட இந்திய இலக்கியம் எனலாம்.

கதையின் களம் தமிழ்நாடு அல்ல; கதை மாந்தர்களும் தமிழர்கள் அல்லர் என்பதால் படிப்பவர்க்கு ஒரு மொழிபெயர்ப்பைப் படிக்கிறோமே என்னும் மயக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு குறையாக அல்ல. நிறைவாகவே அமைந்திருக்கிறது.

இந்நாவலில் வருகிற பாத்திரங்கள் ஒவ்வொன்றும் பிசிறில்லாமல் வார்க்கப்பட்டுள்ளனர். எல்லோருமே மேன்மையானவர்கள். அதிகாரிகள் கூட நமது பரிதாபத்துக்குத் தான் ஆளாகிறார்கள். மக்கள் மீது நேசம் கொண்ட அதிகாரியான சுதீரும் அவரது மனைவியும் அவர்களது தாம்பத்திய இசைவும் அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கதையே அவரது பார்வையில்தான் சொல்லப்பட்டிருக்கிறதாக எனக்குப் படுகிறது.

ராதாபடேங்கரும் அவரது கணவரும் சுதீர் தம்பதிகளுக்கு மாறுபட்ட இணை. எனினும் அவர்களது முரண்பாடுகள் அவர்கள் இருவரின் மேன்மையான பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

கோகுலை நரபலியிட்டதும் நிதின் வன்முறையைக் கைக்கொண்டதும் சிறையில் அவன் தற்கொலை செய்து கொண்டதும் இந்தக் கதையில் வரும் அவலச் சுவைக்கு அழுத்தம் தந்து வாசகன் மனத்தில் வடுவை ஏற்படுத்துகிறது. பெருமூச்செறிய வைக்கிறது. ஆத்தங்கரையோரத்தில் அல்லது இந்த அணைக்கட்டின் பக்கத்தில் எங்கேனும் அந்தக் கோவிந்த்பாய் சுருட்டுப் புகைத்துக்கொண்டு இப்போதும் உட்கார்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது. அந்த மண்ணைவிட்டு ஒருபோதும் அவரது ஆத்மா பிரிந்துபோகாது.

நாகரிகம் நடந்து வந்த பாதை எங்கணும் இவ்விதம் நொறுங்கிப் போன மனித இதயங்கள் வரலாறு நெடுகிலும் எவ்வளவு  எவ்வளவோ?

ஆக்கப் பணிகள் என்ற நம்பிக்கையில் அனைவரின் சம்மதத்தையும் பெற்று இக்காரியங்கள் நடத்தப் பெறவேண்டும். அதற்கு காலதாமதமாயினும் பரவாயில்லை. விஞ்ஞானிகளும் பொறியியல் வல்லுனர்களும் அரசும் சேர்ந்து  திட்டமிட்டு நிறைவேற்றும் இப்பணிகளில் சம்பந்தப்பட்ட அப்பிரதேசத்தில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் மக்களின் மனப்பூர்வமான பங்களிப்பும் இருக்கவேண்டுவது எவ்வளவு அடிப்படையானது. அவசியமானது என்ற கருத்தைத்தான் இந்நாவல் வலியுறுத்துகிறது.

பெருகிவரும் நகரங்களும் நகரங்களின் தேவைகளும் இயற்கை எழிலுக்கும் வளத்துக்கும் விடுக்கின்ற சவாலை நாம் எவ்வாறு சமாளிப்பது என்ற கேள்விக்கு உரிய பதிலை நாம் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்.

நகரங்கள் மட்டும் என்ன வானத்திலிருந்து வந்து குதித்ததா? எழிலும் வளமும் பொருந்திய கிராமங்களில்ருந்து வசதி படைத்தவர்களும் வறியவர்களும் வந்துகூடி உருவாக்கியவை தானே நகரங்கள்? நகரமே வேண்டாம், ஆற்றை கடக்க ஒரு தோணியே போதும்; நாங்கள் தனி உலகமாக வாழவே விரும்புகிறோம்’ என்று சிந்தூரைப் போல் சொல்லுகின்ற கிராமங்கள் இந்தியாவில் எத்தனை உண்டு? சிந்தூருக்குப் பிரச்சினை சிந்தூர் மட்டுமே. இநதியாவின் பிரச்சினை எண்ணற்ற ‘சிந்தூர்’ களின் வளர்ச்சியும் வாழ்வும் சம்பந்தப்பட்டது.

‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்பது மாறி இந்தியாவிலுள்ள கிராமங்கள் நகரங்களை நோக்கியும், நகரங்கள் கிராமங்களை நாடியும் நம்பியும் சஞ்சரித்துக்கொண்டிருக்கிற ஒரு சங்கம யுகம் இது.

விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியும், தகவல் தொடர்பு சாதனங்களின் சாதனைகளும் கிராமத்து மனிதனின் தேவைகளையும், நகர மனிதனின் தேவைகளையும் வித்தியாசமில்லாமல் ஒன்றுபடுத்தி வருகின்ற காலம் இது.

எந்த கிராமமும் எந்த நகரமும் எத்தகைய மாற்றங்களுக்கும் இடம் தராமல் என்றும் போல் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது. நகரங்கள் கிராமங்களையும் கிராமங்கள் நகரங்களையும் பரஸ்பரம் சார்ந்துதான் வாழமுடியும். வளரமுடியும் என்ற நிலையைக் கணக்கில்கொண்டு இந்த இரண்டுக்கும் இசைவும் பரஸ்பரச் சார்பும் சமமாக எந்தப் பகுதிக்கும் பாதிப்பு இல்லாமல் நிறைவேற வேண்டும். அதற்கு அனைத்துப் பகுதி மக்களின் ஆலோசனைகளும் சம்மதமும் வேண்டும். இதைத் தெருவில் வைத்துப் போராடித் தீர்க்க முடியாது. தக்கோர் ஒன்றுகூடி மக்களின் பிரதிநிதிகளை அழைத்து விஞ்ஞானிகளோடும் வல்லுனர்களோடும் சகல அம்சங்களைக் குறித்தும் விவாதித்துத் திட்டமிட்டு ஒரு தேசியக் கடமையாக நிறைவேற்ற வேண்டும்.

அல்லாமல் அரசாங்கம் என்பது ஏதோ அந்நியர்களின் நலனுக்கான அமைப்பு போன்றும் அதிகாரிகள் என்போர் கொலைத்தண்டனை நிறைவேற்றும் கூலிகள் என்றும் அறிவாளிகள் என்போர் பாமர மக்களைத் தூண்டிவிட்டு ஆக்கப் பணிகளுக்குக் குந்தகம் விளைவிப்போர் என்றும் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் ஏதோ பகைமை என்றும் பார்க்கிற போக்கும் நிலையும் பரவுமானால் ‘சிந்தூர்’ கிராமத்துக்கு ஏற்பட்ட அவலங்கள்தான் தொடரும் என்று இந்நாவல் நயம்பட எச்சரிக்கிறது.

வாசகனின் மனதை விசாலப்படுத்திச் சிந்தனையைக் கிளர்த்துகிற அதே சமயத்தில் அழகியல் உணர்வையும் மனித நேயப் பண்புகளையும் வலியுறுத்தி எழுதப்பட்ட ஆசிரியரின் உன்னத நோக்கம் பாராட்டுதற்குரியது.

எவ்வளவோ உற்பாதங்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமும் களமுமான இரண்டாம் உலக மகாயுத்தம் எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் உருவாக எல்லா மொழிகளிலும் வித்திட்டதுபோல், சிந்தூரின் அழிவிலிருந்து ‘ஆத்தங்கரை ஓரம்’ என்ற ஓர் அற்புதமான தமிழ் நாவல் விளைந்திருக்கிறது.

ஆசிரியர் இறையன்பு அவர்களை வாழ்த்துகிறேன். வாசகர்களுக்கும் வாழ்த்து.

அன்பு

த. ஜெயகாந்தன்