இந்தியக் குடியரசு நாள் தோன்றிய வரலாறு

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்!!

இந்த பதிவில் இடம் பெற்றுள்ள கேள்வி மற்றும் பதில்கள் ஆல்பர்ட், அமெரிக்கா அவர்களின்  இந்தியக் குடியரசு தினம் என்ற கட்டுரையில் இருந்து (http://www.muthukamalam.com/muthukamalam_katturai9.htm) பெறப்பட்டது. அவருக்கு எனது நன்றிகள்.

 கேள்வி ::

அதிகாரப் பூர்வமாக ஆண்டுக்கு இருமுறை கோலாகலமாக தேசியக் கொடி ஏற்றி இறக்கப்படுகின்றது.
உலக நாடுகள் எல்லாம் ஒருமுறை, அதாவது அந்தந்த நாடு சுதந்திரம் பெற்ற பொன் நாளை மட்டும் கொண்டாடி மகிழ்கின்ற நிலைதனையும், ஆனால் இந்தியத் திருநாட்டில் மட்டும் … சுதந்திர தினம் என்றும், குடியரசு தினம் என்றும் இரு நாட்களாகக் கொண்டாடுகிற நிலைதனையும் பெற்றிருக்கிறோம் என்பதை எல்லோரும் அறிவோம்.
எதற்காக?எப்போதிருந்து என்பதற்கான விடை காண இன்றைய இளைய சமுதாயம் முயன்றதுண்டா?

ஆனால், ஏன்? இப்படி இரண்டு நாட்கள் கொண்டாட வேண்டும்?

பதில்:

 குடியரசு தினம் மலர்ந்த காரணம்… 

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், ”பூரணசுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்” என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த ‘எங்கு, எப்போது, எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்’ என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது. 

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகி விட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பது குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். 

1930,ஜனவரி 26ம் தேதி- முதல் குடியரசு தினம்! 

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர். 

ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான். 

”நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்.” ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பதாக அவ்வாசகம் அமைந்திருந்தது. 

அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்…சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1948ல்! இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.