முதல் சூப்பர் ஸ்டார்… வாழ்க்கைப் பாடம்..

இந்தியத் திரை உலகில் பேசும் சினிமா தொடங்கியபோது மாநில அளவில் பல்வேறு மொழிகளில் முதல்  சூப்பர் ஸ்டார்கள் உண்டு.
ஆனால் தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் என எம் கே தியாகராஜ பாகவதர் போல் அவர்கள் பெரும் புகழை பெற்றிருக்கவில்லை. புகழ் என்பதை விட வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் என்றே சொல்ல வேண்டும்.
இன்றைக்கு சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் நிலைமை பலருக்கும் தெரிந்த விஷயம்.
ரஜினிக்கு முந்தைய சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆர் திரைத்துறையிலும் அரசியலும் ஒரே நேரத்தில் எவ்வளவு புகழோடு வாழ்ந்து அதேபுகழோடு  சேர்ந்தார் என்பது உலகமே அறிந்த விஷயம். 
ஆனால் முதல் சூப்பர் ஸ்டாரின் வரலாறு மிக மிக வித்தியாசமானது…படிப்பில் ஆர்வம் காட்டாத சிறு பிள்ளைக்கு கண்டிப்பாக வேறொரு விஷயத்தில் அசாத்திய திறமையும் ஆர்வமும் இருக்கும்.. அப்படிப்பட்ட பிள்ளைகளில் ஒருவர்தான் தியாகராஜன்..
இன்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த அச்சிறுவனுக்கு இசை மீதும் பாடுவதிலுமே எண்ணம் மேலோங்கியிருந்தது..
படிக்காத பிள்ளையை எந்த பெற்றோர் நேசிப்பார்கள்? இங்கும் அதே வரலாறுதான், படிக்க மறுத்துவீட்டைவிட்டே ஒடிப்போனான் பிள்ளை.. பாடிப்படி எங்கெங்கோ பிழைப்பு. கடைசியில் ஒரு நாள் தந்தையின் கண்ணில் சிக்க, மறுபடியும் வீட்டு வாசம், 
ஆனால் இம்முறை உன் இஷ்டம் என்று விட்டுவிட்டார்கள் பெற்றோர்.தியாகராஜனின் பாடும் குரல்வளம் நாடகங்களில் வாய்ப்புகளை அள்ளியது. அந்த வாய்ப்பு, சினிமா டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் பார்வையில் பட, பவளக்கொடியில் கதாநாயகன் என்ற அறிமுகத்தை கிடைக்கச்செய்துவிட்டது. 
பவளக்கொடி படம் 1934ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. நவீன சாரங்கதாரா, சத்யசீலன் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் … அவைகளும் வெற்றிமாலை சூடின.
நான்காவது படம்தான் சிந்தாமணி.. ராயல் டாக்கிசார் தயாரித்த அந்த படத்தை இயக்கியவர் ஒய்.வி.ராவ், (நடிகை குமாரி ருக்மணியின் கணவர், நடிகை லட்சுமியின் தந்தை)
சிந்தாமணி படம் திரையிட்ட இடங்களில்லொம் தாறுமாறாய் ஓடியது. தமிழ் திரை உலகில் ஒரு வருடத்திற்கு மேலே ஒடிய முதல் படம் என்ற கிரீடத்தையும் சூட்டிக்கொண்டது..படம் அள்ளித்தந்த வசூலை வைத்து மதுரையில் சிந்தாமணி என்ற பெயரில் ஒரு தியேட்டரே கட்டப்பட்டது.
தியாகராஜன் என்ற ஹீரா பாடல்களுக்காக கொண்டாடப்பட்டார். எம்.கே. தியாகராஜ பாகவதர் என்றாகி எம்கேடி என்றெழுத்து தாரக மந்திரமும் ரசிகர்கள் மத்தியில் உண்டானது. ஆம். இப்படித்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் உருவெடுத்தார்.
அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார் சிவகவி என மேலும் நான்கு பாக்ஸ்ஆபிஸ் ஹிட் படங்கள். ஒரு பக்கம் பணம் கொட்டோ கொட்டுவென கொட்டியது. 
இன்னொரு பக்கம் எங்கு சென்றாலும் ரசிகர்களின் இன்பத்தொல்லை. பாகவதரின் தோற்றத்துக்கும் குரல் வளத்துக்கும் அடிமையாகிப்போன ரசிகைகள் இன்னும் அதிகம்.
1944ல் தமிழ் சினிமா உலகின் முதல் கனவுக்கன்னியான டிஆர் ராஜகுமாரியுடன் ஹரிதாஸ் படத்தில் இணைகிறார் பாகவதர்..
மன்மத லீலையை வென்றவர் உண்டோ..
இந்தப் பாடல் 77 ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் உலுக்கி எடுக்கிறது. அப்படியானால்1944-ல் ஹரிதாஸ் படத்தின் இந்தப்பாடல் தியேட்டர்களில் ஓடும்போது ரசிகர்கள் ஆரவாரம் எப்படி இருந்திருக்கும்?
ஹரிதாஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட். 110 வாரங்கள். அதாவது மூன்று தீபாவளியை காண்கிறது.. பத்துக்கும் மேற்பட்ட படங்கள் பாகவதவருக்கு புக் ஆகின்றன. 
விதி வேறு விதமாக பாகவதர் கனவிலும் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு விளையாடுகிறது.. 
பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனோடு பாகவதர் கைதாகி சிறைக்கு போகிறார்.. 
வழக்கு நடக்கிறது.. நடக்கிறது. இன்னொரு பக்கம் வழக்குக்களுக்காக சொத்துகளும் கரைகின்றன..லண்டன்வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி மூன்றாண்டுகள் கழித்து 1947ல் விடுதலையாகி வெளியே வருகிறார் பாகவதர்.
ஆனால் திரையுலமே மாறிப்போயிருக்கிறது.. அதாவது பாகவதரை கண்டுகொள்ள ஆளில்லாமல் அடியோடு மறந்துபோயிற்று,
வேறுவழியில்லாமல் பாகதவரே சொந்தமாக படம் எடுக்கிறார். விஎன்ஜானகி மற்றும் பானுமதி என இரு கதாநாயகிகள்.. ஏற்கனவே அசோக்குமார் படத்தில் பாகவதருடன் நடித்த எம்ஜிஆரும் ராஜமுக்தியில் நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ராஜமுக்தி படு பிளாப்..
ஒன்பதே படங்களில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் உச்சத்துக்கு போன பாகவதருக்கு. முக்கியமான கட்டத்தில் வெளிவந்த பத்தாவது படம் அவுட்.. இதன்பிறகு என்னென்னவோ முயன்று பார்த்தும் எம்கே தியாராஜபாகவதாரல் நிமிரவேமுடியவில்லை….
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சொந்தக்குரலில் பாடமுடிந்தவர்கள் மட்டுமே ஹீராவாக நடிக்கமுடியும் என்ற நிலைமாறி டப்பிங் வசதி வந்து எம்ஜிஆர் சிவாஜி போன்றோர் தலை தூக்கிவிட்டதே..
மேலும் மூன்று படங்கள் ஓடாத நிலையில் பாகவதர் இறந்தபிறகு அவரின் 14 வது மற்றும் கடைசி படமான சிவகாமி 1960ல் வெளியானது. பாகவதர் நடித்த சில காட்சிகளை வைத்து தெலுங்கு நடிகர் ஜக்கையாவை வைத்து ஒப்பேற்றி எடுத்து கந்தல் கோலத்தில் வெளியிட்டார்கள்..
பாகவதரின் சிவகாமி படத்தில் அவர் பாடிய பாடல்களை விட ஜக்கையாவுக்காக டிஎம்எஸ் பாடிய ”வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்” என்ற பாடல் செம ஹிட்.. 
இன்றளவும் சிவகாமி படத்தை இணையத்தளங்களில் ஓட்டிக்கொண்டிருப்பது, ஜக்கையா பாடியபடி வர நடிகை ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீ ஆடியபடி வரும் அந்த பாடல்காட்சிகள்தான்.
எம்கேடியின் வாழ்க்கை அலாதியானது. கதாநாயகனாக மட்டும் இசைக்கச்சேரிகளிலும் பெரும் ஆர்வம் காட்டினார். மிகப்பெரிய செல்வந்தர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் அவரின் கச்சேரி மிகபெரிய அடையாளமாக கௌரவமாக கருதப்பட்டது. பாகவதர் கேட்ட பணத்தை கொட்டிக்கொடுத்தார்கள்..
செல்வம் புரண்டது. சென்னையில் மூன்று பிரமாண்டமான பங்களாக்கள், திருச்சியில் ஒரு பங்களா என கட்டினார். சகோதரிகளையெல்லாம் மிகுந்த செலவில் திருமணம் செய்துவைத்தார். வெள்ளி அண்டாவில்தான் குளிப்பார். தங்கத்தட்டில்தான் சாப்பிடுவார் என்றெல்லாம் பேசப்பட்டது பாகவதரின் வாழ்க்கை.
பணத்திலேயே புரண்டாலும் எம்கேடி பாகவதர் கல்வி நிறுவனங்களில் வளர்ச்சிக்கோ, கோவில்களுக்கோ கச்சேரி செய்தபோது பத்து பைசாகூட வாங்காமல் இலவசமாகவே செய்துகொடுத்தார் என்பார்கள்.
அப்படிப்பட்ட தமிழின் சூப்பர் ஸ்டார் எம்கே. தியாகராஜபாகவதர், வறுமைக்கு ஆளாகி கடைசில் சென்னை அரசு மருத்துவமனையில் காலமாகும்போது வயது வெறும் 49 தான்..
பாகவதர் 1947ல் சிறையிலிருந்து வெளியே வந்தபோது திராவிய இயக்கத்தை சேர்ந்த பிரபலங்கள் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்க துவங்கியிருந்தார்கள்.  எம்ஜிஆர் முதன் முதலாய் கதாநாயகனாகி கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருந்தநேரம் அது..
திராவிட இயக்கத்தை சேர்ந்த கலைவாணர் என்எஸ்கே போன்றோர், பாகவதரை தங்கள் பாதைக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் மிகுந்த தெய்வபக்தி கொண்ட பாகவதர் நாத்திக கருத்துக்களோடு ஒப்புக்கொண்டுபோக மறுத்துவிட்டார். 
ஒருவேளை பாகவதர், திராவிட இயக்க பக்கம் போய் நடிப்பில் வேறு அவதாரம் எடுத்திருந்தால் வரலாறு வித்தியாசமாக போயிருக்கலாம்..
எம்கேடி இறந்து இன்றோடு 62 ஆண்டுகள் ஆகின்றன.. அவர் பாடிய,
சொப்பன வாழ்வில் மகிழ்ந்துசுப்ரமணிய சுவாமி உனை மறந்தார்அந்தோ,அற்பப் பணப் பேய் பிடித்தேஅறிவிழந்து அற்பர்களைப் புகழ்வார்.. 
போன்ற பாடல்கள் இன்னமும் தமிழர்களின் காதுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.