ஏன் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும்?

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில், பள்ளி மாணவியை கற்பழிக்க முயன்று கொலை செய்த, “காமக் கொடூரன்’ கைது செய்யப்பட்டான். தூத்துக்குடி செய்துங்கநல்லூர், கிளாக்குளத்தை சேர்ந்த புனிதா, 13, நாசரேத் பள்ளியில், 7ம்வகுப்பு படித்தார். டிச., 20ம் தேதி, பள்ளி சென்ற புனிதா, வீடு திரும்பவில்லை. தாதன்குளம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, காட்டுப் பகுதியில், நேற்று முன்தினம் காலை, அவரது உடலை போலீசார் மீட்டனர். தனிப் படை அமைத்து, கூடுதல், எஸ்.பி., கொலையாளிகளை தேடினார். மணியாச்சியைச் சேர்ந்த சுப்பையா, 37, என்பவன், மாணவியை கொன்றது தெரிந்தது. கைது செய்து விசாரணை நடத்தியதில், போதையில் கற்பழிக்க முயன்று, கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.

இதுகுறித்து, எஸ்.பி., ராஜேந்திரன் கூறியதாவது: சுப்பையாவுக்கு, வசந்தி என்ற மனைவி, மகள், இருமகன்கள் உள்ளனர். பெண்களிடம் சில்மிஷம் செய்வது இவனது பழக்கம். கடந்த மாதம், பாறைக்குட்டத்தில், சித்தி மகளிடம் தவறாக நடக்க முயன்றதால், கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தான். இப்பிரச்னையில், சித்தி மற்றும் அவர் மகளை அரிவாளால் வெட்டி, தலைமறைவானான். இந்நிலையில், தாதன்குளத்தில் இவனது அண்ணன் இசக்கிதுரை, ரயிலில் டீ வியாபாரம் செய்து வருகிறார். அவரது வீட்டிற்கு செல்ல, நெல்லையில் இருந்து, திருச்செந்தூர் ரயில் மூலம், தாதன்குளத்திற்கு, டிச., 19ம் தேதி இரவு வந்தான். மது குடித்துவிட்டு அங்கேயே தங்கினான். மறுநாள் காலையிலும், போதையில் இருந்தவன், காலை, 7:00 மணிக்கு, மாணவி புனிதா நடந்து வந்ததை கவனித்துள்ளான். அவரை, ரயில்வே ஸ்டேஷன் அருகே, முட்புதருக்குள் தூக்கிச் சென்று, கற்பழிக்க முயன்றான். புனிதா கூச்சலிடவே, சுரிதார் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.