10-ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்கள் வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வரும் 10-ம் தேதிக்குள் மாணவர்களுக்கு வினியோகிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமச்சீர் கல்விக் குறித்த வழக்கு, நீதிபதிகள் ஜே.எம். பாஞ்சால், தீபக் வர்மா, பி.எஸ். சௌஹான் முன்பாக விசாரணைக்கு வந்தது.

சமச்சீர் கல்வியை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்துமாறும், ஆகஸ்ட் 2-ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகிக்குமாறும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி கட்ட விசராணை நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகடங்களை மாணவர்களுக்கு வினியோகிக்க வரும் 10-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது.

நேற்று நடந்த இறுதிகட்ட விசாரணையின்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ் கூறியதாவது,

சமூகநீதி காக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. ஆனால் சமச்சீர் கல்வி முறையின் மூலம் அனைவருக்கும் தரமான கல்வி வழங்கப்படவில்லை என்பதலேயே அதை இந்தாண்டு நடைமுறைபடுத்தவில்லை.

சமச்சீர் கல்வியை செயல்படுத்த தகுந்த விதிமுறைகள், தரமான பாடப்புத்தகங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டு, அடுத்தாண்டு அல்லது அதன் பின்னரோ அமல்படுத்த வேண்டும், என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விதிமுறைகள் இன்னும் இயற்றப்படாததால் இந்தாண்டு அமல்படுத்தவில்லை.

முந்தைய அரசு அவசர அவசரமாக சமச்சீர் கல்வியை அமல்படுத்தியதே தவிர அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தமிழக அரசு திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ எதிரானது அல்ல. சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் கருணாநிதி புகழ்பாடப்பட்டுள்ளது. அவரது புகழை நிலைநாட்ட சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை பயன்படுத்தியுள்ளனர்.

தமிழக அரசு தரமான சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதில் முனைப்பாக உள்ளது. இதை அடுத்த ஆண்டிலோ அல்லது வரும் ஆண்டுகளிலோ செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

சமச்சீர் கல்வி திட்டத்திற்கு முந்தைய அரசு வெறும் அரை மணி நேரத்திலேயே ஒப்புதல் அளித்தது என்று தனியார் பள்ளிகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தாவன் தெரிவித்தார்.

ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் அந்தி அர்ஜுனா தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்தன.

சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களை வரும் 10-ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து ஆட்சேபம் இருப்பின் இரு தரப்பினரும் அதை எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் சமர்பிக்கலாம் என்றனர். மேலும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

சென்னை: திமுக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்த அதிமுக அரசின் சட்ட திருத்தத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையே தொடரப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்கும் சமச்சீர் கல்வி திட்டத்தை முந்தைய திமுக அரசு அறிமுகம் செய்தது, இந்தாண்டுக்கான பாடப் புத்தகங்களும் அச்சடிக்கப்பட்டன.

ஆனால், இந்த பாடப் புத்தகங்கள் தரமானதாக இல்லை என்று கூறி சமீபத்தில் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், சமச்சீர் கல்வியை ரத்து செய்யும் சட்டத் திருத்தம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக தாக்கலான வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், தமிழக அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மாணவர்களின் நலன் கருதி பழைய கல்வி முறையை அமல்படுத்த இந்த நீதிமன்றம் அனுமதி மறுக்கிறது என்றும், சமச்சீர் கல்வி முறையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதே நேரத்தில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் தேவையான பக்கங்களை நீக்கவோ, சேர்க்கவோ தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் தமிழகத்தில் மீண்டும் சமச்சீர் கல்வி முறையையே அமலுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால பெஞ்ச்சில் அப்பீல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்காக அரசு வழக்கறிஞர்கள் நேற்றே டெல்லி விரைந்தனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் இன்று காலை டெல்லி சென்றார்.

சென்னை: நடப்புக் கல்வியாண்டில் சமச்சீர்கல்வித் திட்டத்தை ரத்து செய்யும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போத நடைமுறையில் உள்ள மாநில அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரே பாடத் திட்டமாக மாற்றி சமச்சீர் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆரம்பத்தில் 1 மற்றும் 6ம் வகுப்புகளில் இது அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் இது நீட்டிக்கப்படவிருந்தது. இந்த நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்படவே, புதிதாக அமைந்துள்ள அதிமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டில் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

மேலும் பள்ளிகள் திறப்பை ஜூன் 15ம் தேதி தள்ளி வைத்த தமிழக அரசு, புதிய புத்தகங்களை அச்சடிக்கவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இன்று 2வது நாள் விசாரணை நடந்தது.

விசாரணைக்குப் பின்னர் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வித் திட்ட திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இன்றைய விசாரணையின்போது தலைமை நீதிபதி இக்பால் தமிழக அரசுக்கு பலவேறு கேள்விகளை விடுத்தார். சமச்சீர் கல்வித் திட்டம் சரியானதே என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்படி இருக்கும்போது இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்தது ஏன்?.

அவசரச் சட்டத் திருத்த மசோதாவை தாகக்கல் செய்ய அவசரம் காட்டியது ஏன்?. எதற்காக இந்த அவசரம்.?

சமச்சீர் கல்வித் திட்ட பாடப் புத்தகங்களில் சில குறிப்பிட்ட பகுதிகள் தேவையில்லை என்று கருதினால் அவற்றை மட்டும் ரத்து செய்து விட்டு புத்தகங்களை வெளியி்ட்டிருக்கலாமே? அதைச் செய்யாதது ஏன்?.

இந்த புத்தகங்களை ரத்து செய்வதால் ரூ. 200 கோடி இழப்பு ஏற்படுகிறதே. அது யாருக்கு இழப்பு?

சமச்சீர் கல்வித் திட்டத்தை ரத்து செய்வதற்கு முன்பு நிபுணர்களின் கருத்துக்கள் அறியப்பட்டதா?. பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டதா?

இப்படி திடீரென திட்டத்தை ரத்து செய்வதால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் பாதிப்பை சந்திப்பார்கள்.

இந்தத் திட்டம் இந்த ஆண்டும் தொடர வேண்டும். சட்டத் திருத்த மசோதாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை: தமிழக சட்டசபையில் சமச்சீர் கல்வித் திருத்த சட்ட மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல குளறுபடிகள் இருப்பதாலும், தரமில்லாமல் இருப்பதாலும் அத்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

இதுகுறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று கூடிய தமிழக சட்டசபையில், சமச்சீர்வி கல்வித் திட்ட திருத்த மசோதாவை அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.

சட்டமேலவை ரத்து தீர்மானம்

அதேபோல சட்ட மேலவையை ரத்து செய்வதற்கான தீர்மானமும் இன்று சட்டசபையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு 200 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.