50 சென்ட்… மாதம் 30 ஆயிரம்…

பட்டதாரி இளைஞர்களின் பலே விவசாயம்..!
த. ஜெயகுமார்,படங்கள்: பீரகா வெங்கடேஷ்
இயற்கை விவசாயத்தில் பட்டதாரி இளைஞர்கள்…

கூட்டுப் பண்ணையில் கீரைகள்…

விரைவில் இயற்கை விவசாயச் சந்தை…

விவசாயிகளின் பிள்ளைகளே விவசாயத்தை மறந்து அல்லது துறை மாற நினைத்து… பன்னாட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்திருக்கும் நவீன யுகம் இது! இதற்கு நடுவே, விவசாயமே தெரியாத சிலர்… பன்னாட்டு நிறுவன வேலைகளை உதறிவிட்டு, விவசாயத்தைக் கையிலெடுக்கிறார்கள் என்றால்… ஆச்சர்யம்தானே!

சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள், விஞ்ஞானி, கல்லூரிப் பேராசிரியர், வழக்கறிஞர், ஆடிட்டர், பொறியாளர்கள் என பல துறையைச் சேர்ந்த இவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது, இயற்கை விவசாயம். ‘நல்ல கீரை’ என்கிற பெயரில் அமைப்பை உருவாக்கி, பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்… ஜெகன்னாதன், கௌதம், ராதாகிருஷ்ணன், சலோமிஏசுதாஸ், ராமு, விசு, திருமலை, புனிதா, ஷாம், சிவகுமார், ராஜமுருகன், அறிவரசன் ஆகிய 12 பட்டதாரி இளைஞர்கள்!

திருநின்றவூர்-பெரியப்பாளையம் பிரதான சாலையில், ஐந்தாவது கிலோ மீட்டரில் பாக்கம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு இந்த அமைப்பினர், இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்து… சென்னையில் நேரடியாக சந்தைப்படுத்தி வருகிறார்கள்.

பண்ணைக்குத் தேடிச் சென்ற நம்மிடம், முதலில் பேச ஆரம்பித்த ஜெகன்னாதன், ”கிராமப் பொருளாதாரத்தப் பத்தி அடிக்கடி நான் சிந்திப்பேன். அதோட தொடர்ச்சியா, கிராம மக்கள்கிட்ட சர்வே பண்ணினேன். 240 குடும்பங்கள்கிட்ட ஆய்வு பண்ணினதுல… செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மதுபானங்கள், புகையிலைனு வருஷத்துக்கு 1 கோடியே

60 லட்ச ரூபாயைச் செலவு செய்றாங்கனு தெரிஞ்சுது. படாதபாடுபட்டு இந்தக் குடும்பங்கள் சம்பாதிக்கற பணம்… சம்பந்தமில்லாத யாருக்கோ போறத நினைக்கறப்ப… ரொம்ப வருத்தமா இருந்துச்சு.

இந்தச் செலவைக் குறைக்கறதுக்கும், இவங்கள இதுல இருந்து மீட்டெடுக்கறதுக்கும் என்ன வழி?னு யோசிச்சப்பதான்… இயற்கை விவசாயத்தால உரம், பூச்சிக்கொல்லிச் செலவை சுத்தமா ஒளிச்சுடலாம்னு தோணுச்சு. இதுக்காகவே நம்மாழ்வார் அய்யா நடத்துன பல கூட்டங்கள்ல கலந்துகிட்டேன். இயற்கை விவசாயிகள் பலரையும் சந்திச்சேன். அவங்ளோட தங்கி, அவங்க செய்ற விவசாயத்தப் பாத்து, தொழில்முறையா எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுகிட்டேன்.

இணைத்த இயற்கை!

அப்போ பன்னாட்டு கம்பெனியில வியாபார மேம்பாட்டாளரா நான் இருந்தேன். அங்க நண்பர்களோட பேசினதுல… நிறைய பேருக்கு இதுல ஆர்வம் இருக்கறது தெரிஞ்சது. அவங்களையெல்லாம் இணைச்சு… இந்த அமைப்பைத் தொடங்கினோம். முதல் கட்டமா, சென்னை மக்களுக்கு ரசாயனம் தெளிக்காத கீரையை உற்பத்தி செஞ்சு கொடுக்கலாம்னு முடிவு செஞ்சோம். அதுக்காக, இந்த 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கீரை சாகுபடியைத் தொடங்கியிருக்கோம். விளையற கீரையை சென்னையில வாடிக்கையாளர்களுக்கு நேரடியா விற்பனை செய்றோம்.

மொத்தமிருக்கற 12 உறுப்பினர்கள்ல… நாலு பேர் முழுநேரமா செயல்படுறோம். இதுக்காகவே… ஏற்கெனவே நாங்க பார்த்திட்டிருந்த வேலையை விட்டுட்டோம் (ஜெகந்நாத், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் மருத்துவ நிறுவன அதிகாரிகளாகவும்… கௌதம், மின்சாதனங்கள் தயாரிக்கும் நிறுவன நிதி ஆலோசகராகவும், சலோமி ஏசுதாஸ் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் டெக்கான் டெவலப்மென்ட் சொஸைட்டி தொண்டு நிறுவன திட்ட அதிகாரியாகவும் பணியாற்றி வந்தனர்). மத்த உறுப்பினர்கள்.. வாரம் ஒரு முறை வருவாங்க. மாசம் ஒரு முறை கூட்டம் நடத்துவோம். அவங்கவங்க ஆலோசனைகளைப் பரிமாறிக்குவோம்.

இயற்கை உரத் தேவைக்காகவே நாட்டு மாடுகளை வளர்க்கிறோம். இப்போதைக்கு எட்டு மாடுகள் இருக்குது. இயற்கை முறையில விளைஞ்ச பொருட்களை விக்கிறதுக்காக… ‘நல்ல சந்தை’னு ஒரு அமைப்பையும் தொடங்கப் போறோம். இயற்கை விவசாயிகள், அத்தனைப் பேருமே பயன்படுற வகையில லாபநோக்கம் இல்லாம இதை நடத்தப் போறோம்” என்றார் ஜெகன்னாதன்!

”கீரையில சின்னச்சின்ன ஓட்டைகள் இருந்தாகூட… பூச்சிக் கீரைனு சொல்லி வாங்க மாட்டேங்கறாங்க சிலர். இயற்கை முறையில விளைவிக்கறப்ப… சில நேரங்கள்ல கீரைகள் இப்படித்தான் இருக்கும். அதோட, பூச்சிகள் சாப்பிடற கீரைகளை சாப்பிடறதால எந்த பாதிப்பும் இல்லைங்கறதுதான் உண்மை. பூச்சிங்க சாப்பிட்டிருந்தா… அது இயற்கையில விளைஞ்ச கீரைனு நம்பி வாங்கலாம். ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கற வயல்கள்ல இருந்து வர்ற கீரைகள்தான், பெரும்பாலும் ஓட்டைஇல்லாத கீரையா இருக்கும்.

பொதுவா… காய்கறி, கீரை, பழம்னு எல்லாத்துக்குமே சீசன் இருக்கு. அந்தந்த சீஸன்லதான்… அதெல்லாம் நல்லா விளையும். அப்படிப்பட்ட காய்கறிகளை, இயற்கை முறையில எளிதா விளையவெக்க முடியும். ஒவ்வொரு சீஸன்லயும், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் என்ªன்ன தேவைப்படும்னு இயற்கையே செய்திருக்கற ஏற்பாடுதான் இது. அதனால, அந்தந்த சீஸன்ல விளையறதை மட்டும் வாங்கிச் சாப்பிடறதுதான் நல்லது. இந்த உண்மை புரியாம, பலரும் சீஸன் இல்லாத சமயங்கள்லகூட அந்தக் காய்கள்தான் வேணும்னு வற்புறுத்திக் கேக்கறாங்க” என்று தங்களது சிக்கலைச் சொன்னார், முழுநேர ஊழியர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணன்.

விதவிதமா இருக்குது, கீரை!

”முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, சுக்கான், சக்கரவர்த்தினி, பசலைக் கீரை, அரைக் கீரை, சிறு கீரை, கொத்துமல்லி, புதினா, பொன்னாங்கன்னி, சிகப்புப் பொன்னாங்கன்னி, கோங்கூரானு சொல்லற சீமைக் காசினி, கொம்புக் காசினி, அகத்தி, முருங்கை, வல்லாரை, தூதுவளை, முடக்கத்தான், வெந்தயக் கீரை, கல் இளக்கி, காசினி, கறிவேப்பிலை, மணத்தக்காளி, தண்டுக் கீரை, பருப்புக் கீரை, தவசிக் கீரை, சிலோன் கீரை, திருநீற்றுக் கீரை… இப்படி முப்பதுக்கும் மேற்பட்ட கீரை வகைகளை சாகுபடி செய்றோம்” என்று பட்டியலிட்ட முழு நேர ஊழியர் கௌதம், கீரை சாகுபடி செய்யும் முறைகள் குறித்து பாடம் சொன்னார்.

நிறைவாகப் பேசிய கௌதம், ” ஒரு பாத்தி அமைக்க, 200 ரூபாய் செலவாகும். முதல் கட்டமா, நாங்க மொத்தம் 50 சென்ட் நிலத்துல 300 பாத்திகள அமைச்சுருக்கோம். இதை ஒரு முறை அமைச்சா… மூணு, நாலு தடவை சாகுபடி பண்ணலாம். ஒரு பாத்தியில அதிகபட்சம், 100 கட்டு கீரை பறிக்க முடியும். ஒரு கட்டுக்கு 5 ரூபாய்க்கு குறையாம விலை கிடைக்கும். பாத்திகளோட இடைவெளியில அகத்தி, வல்லாரை, தூதுவளை, பிரண்டை மாதிரியான பயிர்களைப் போட்டிருக்கோம். வேலைக்கு 2 பேர் இருந்தா போதும். 300 பாத்தியிலிருந்தும் மாசத்துக்கு 30 ஆயிரம் ரூபா வரை வருமானம் கிடைச்சுட்டுருக்கு.

ஒரு பானை சோத்துக்கு, ஒரு சோறு பதம் போல, 50 சென்ட் நிலத்துல பல விஷயங்களைக் கத்துக்கிட்டோம். இந்த அனுபவத்தை வெச்சே… கீரை சாகுபடியை விரிவுப்படுத்தப் போறோம். அதேபோல, வேறு சில பயிர்களையும் கையில எடுக்கப் போறோம். இதன் மூலமா மொத்தமா இருக்கற

5 ஏக்கர்ல இருந்தும், ஒவ்வொரு மாசமுமே… பல லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். முறையா திட்டம் போட்டு உழைச்சா, விவசாயமும், மத்த தொழில் மாதிரி லாபம் கொட்டும். ஏற்கெனவே நாங்க பார்த்துட்டிருந்த வேலையில கிடைச்ச சம்பளத்தைவிட, இன்னும் கூடுதலா விவசாயத்தின் மூலமே லாபம் பார்க்க முடியும்கிறத நிரூபிச்சே தீருவோம்” என்று சூளுரைத்து விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,

ஜெகன்னாதன், செல்போன்: 99626-11767
கௌதம், செல்போன்: 98406-14128
ராதாகிருஷ்ணன், செல்போன்: 97898-40630

——————————————————————————–

தெளிப்புப் பாசனம்தான் நல்லது !

கீரை சாகுபடிக்கு கௌதம் சொல்லும் சாகுபடி முறை !

‘கீரை சாகுபடிக்கு மேட்டுப்பாத்தி முறைதான் சிறந்தது. சாகுபடிக்குத் தயார் செய்த நிலத்தில், 30 சதுர அடிக்கு ஒரு பாத்தி என்கிற அளவில் அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கு இடையிலும் நடந்து செல்ல வசதியாக, இடைவெளிவிட வேண்டும். பாத்தியைச் சுற்றி செங்கல் அல்லது ஓடுகள் மூலமாக அரண் அமைத்துக் கொண்டால், இடும் தொழுவுரம் கீழே சரியாது.

பாத்திக்குள் நன்றாகக் கொத்திவிட்டு, அரையடி உயரத்துக்கு மேடாக்கி, ஒரு கூடை எருவை விதையோடு சேர்த்துத் தூவ வேண்டும். ஒரு பாத்தியில் தூவிய ரகத்தை அடுத்தப் பாத்தியில் தூவக் கூடாது. ஒரே ரகத்தைப் போட்டால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், முதலில் தூவிய ரகத்தை மூன்று பாத்திகள் தள்ளித்தான் தூவ வேண்டும். கீரை தூவிய உடனே பாசனம் செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தியில் கீரை உற்பத்தி செய்ய… தெளிப்பு நீர்ப் பாசனம்தான் சிறந்தது. இம்முறையில் சீக்கிரம் விதை முளைக்கத் தொடங்கும்.

——————————————————————————–

அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை !

வெந்தயக்கீரை 15 நாட்களிலும், சிறுகீரை, பருப்புக்கீரை ஆகியவை 20 நாட்களிலும், முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை 30 நாட்களிலும், கொத்தமல்லி

40 நாட்களிலும், வல்லாரை, பொன்னாங்கன்னி ஆகியவை 60 நாட்களிலும் அறுவடைக்கு வரும்.

பசலை, சுக்கான், காசினி, புளிச்சக்கீரை, மணத்தக்காளி, முருங்கை, கறிவேப்பிலை ஆகியவை 6 மாதத்தில் அறுவடைக்கு வரும்.

கீரைகளைப் பெரும்பாலும் நோய்கள் தாக்காது. ஆனால், பூச்சித்தாக்குதல் இருக்கும். கீரைப் பாத்திகளுக்கு அருகில் சாமந்தி, ஆமணக்குச் செடிகளை நட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அதையும் மீறி பூச்சித்தொல்லை இருந்தால்… மஞ்சள் நிற டப்பாக்களில் கிரீஸ் தடவி, பாத்திகளின் அருகில் போட்டு விட்டால் போதும். பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்ளும். கீரைகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக அமுதக்கரைசல், பஞ்சகவ்யா ஆகியவற்றை தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’

——————————————————————————–

தெளிப்புப் பாசனம்தான் நல்லது !

கீரை சாகுபடிக்கு கௌதம் சொல்லும் சாகுபடி முறை!

‘கீரை சாகுபடிக்கு மேட்டுப்பாத்தி முறைதான் சிறந்தது. சாகுபடிக்குத் தயார் செய்த நிலத்தில், 30 சதுர அடிக்கு ஒரு பாத்தி என்கிற அளவில் அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கு இடையிலும் நடந்து செல்ல வசதியாக, இடைவெளிவிட வேண்டும். பாத்தியைச் சுற்றி செங்கல் அல்லது ஓடுகள் மூலமாக அரண் அமைத்துக் கொண்டால், இடும் தொழுவுரம் கீழே சரியாது.

பாத்திக்குள் நன்றாகக் கொத்திவிட்டு, அரையடி உயரத்துக்கு மேடாக்கி, ஒரு கூடை எருவை விதையோடு சேர்த்துத் தூவ வேண்டும். ஒரு பாத்தியில் தூவிய ரகத்தை அடுத்தப் பாத்தியில் தூவக் கூடாது. ஒரே ரகத்தைப் போட்டால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால், முதலில் தூவிய ரகத்தை மூன்று பாத்திகள் தள்ளித்தான் தூவ வேண்டும். கீரை தூவிய உடனே பாசனம் செய்ய வேண்டும். மேட்டுப்பாத்தியில் கீரை உற்பத்தி செய்ய… தெளிப்பு நீர்ப் பாசனம்தான் சிறந்தது. இம்முறையில் சீக்கிரம் விதை முளைக்கத் தொடங்கும்.

——————————————————————————–

அதிக நாட்கள் காத்திருக்கத் தேவையில்லை !

வெந்தயக்கீரை 15 நாட்களிலும், சிறுகீரை, பருப்புக்கீரை ஆகியவை 20 நாட்களிலும், முளைக்கீரை, சிகப்பு முளைக்கீரை, தண்டுக்கீரை ஆகியவை 30 நாட்களிலும், கொத்தமல்லி

40 நாட்களிலும், வல்லாரை, பொன்னாங்கன்னி ஆகியவை 60 நாட்களிலும் அறுவடைக்கு வரும்.

பசலை, சுக்கான், காசினி, புளிச்சக்கீரை, மணத்தக்காளி, முருங்கை, கறிவேப்பிலை ஆகியவை 6 மாதத்தில் அறுவடைக்கு வரும்.

கீரைகளைப் பெரும்பாலும் நோய்கள் தாக்காது. ஆனால், பூச்சித்தாக்குதல் இருக்கும். கீரைப் பாத்திகளுக்கு அருகில் சாமந்தி, ஆமணக்குச் செடிகளை நட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அதையும் மீறி பூச்சித்தொல்லை இருந்தால்… மஞ்சள் நிற டப்பாக்களில் கிரீஸ் தடவி, பாத்திகளின் அருகில் போட்டு விட்டால் போதும். பூச்சிகள் அதில் ஒட்டிக் கொள்ளும். கீரைகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக அமுதக்கரைசல், பஞ்சகவ்யா ஆகியவற்றை தேவையான அளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.’