Chennai: August 25th 2009 : ஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, பால் கொள்முதல் விலையை உயர்த்தியதை வரவேற்கும் நிலையில், பால் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இரண்டு மாதங்கள் ஆவதற்குள், தி.மு.க அரசு தன் பங்கிற்கு பாலின் விலையை மூன்றாவது முறையாக உயர்த்தி மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது போல், தவறாமல் ஆண்டுக்கு ஆண்டு பாலின் விலையை உயர்த்திக் கொண்டு இருக்கும் தி.மு.க அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க அரசு பொறுப்பேற்ற ஒரு வருடத்திற்குள் முதல் முறையாக 6.3.2007 அன்று பாலின் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 25 காசு வீதம், 12 ரூபாய் 50 காசில் இருந்து 13 ரூபாய் 75 காசு என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக, 2008 ஆம் ஆண்டு பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வீதம், அதாவது 13 ரூபாய் 75 காசில் இருந்து 15 ரூபாய் 75 காசாக தி.மு.க அரசால் உயர்த்தப்பட்டது.
தற்போது மூன்றாவது முறையாக லிட்டருக்கு 2 ரூபாய் வீதம், 15 ரூபாய் 75 காசில் இருந்து 17.75 காசாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். மாதாந்திர அட்டையில்லாமல் தினசரி ரொக்கமாக கொடுத்து வாங்குபவர்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா வீதம் 18 ரூபாயிலிருந்து 20 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
நிலைப்படுத்திய பால், நிறை கொழுப்புச் சத்து பால் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது குறைந்தபட்சம் 2 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 4 ரூபாய் வரை பாலின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் இதர பால் பொருட்களின் விலைகள் அறிவிப்பு இல்லாமலேயே உயர்ந்து கொண்டிருக்கின்றன.
எனது ஆட்சிக் காலத்தில் 2004 ஆம் ஆண்டு, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை உயர்த்திக் கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில் நுகர்வோர் நலன் கருதி பாலின் விற்பனை விலை உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் என இருதரப்பினரும் பயன் அடைந்தனர். ஆனால் தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதாவது மூன்று மாதங்களுக்குள் அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் பெருமளவு உயர்ந்து விட்டன. இந்தச் சூழ்நிலையில், பாலின் விலையை தி.மு.க அரசு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள இந்தச் சூழ்நிலையில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்தியதை வரவேற்கும் அதே சமயத்தில், நுகர்வோர் நலன் கருதி, பால் விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுமாறு தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
பேருந்து கட்டணம் உயராது: செந்தில் பாலாஜி
சென்னை, ஜூன் 25: டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று தமிழக போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
டீசல் விலையை மத்திய அரசு நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி உள்ளது. கெரசின் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ. 50-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து துறைக்கும் செலவு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. அரசு பஸ் கட்டணம் உயருமா? என்ற கேள்வி பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில், “அதிமுக அரசு மக்கள் நல அரசாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு எந்த சுமையும் ஏற்படாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பொதுமக்களை பாதிக்கும் வகையில் எந்த கட்டணமும் உயராது என்று முதல்வர் அறிவித்துள்ளார். அந்த வகையில் டீசல் விலை உயர்ந்தாலும் அரசு பஸ் கட்டணம் உயராது.
ஏழை-எளிய மக்கள் அரசு பஸ்களை அதிகம் பயன் படுத்துகிறார்கள். அதனால் பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் தமிழக அரசிற்கு இல்லை. இதனால் போக்கு வரத்து கழகத்திற்கு ஏற்படும் இழப்பை முதல்வர் வழிகாட்டுதலின்படி சரி கட்டுவோம்” என்று தெரிவித்தார்.
டீஸல்,கேஸ், கெரசின் விலை உயர்வு: ஜெயலலிதா கடும் கண்டனம்
சென்னை 25th June 2011: டீஸல், கேஸ், கெரசின் விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
மத்திய அரசு டீசலுக்கான விலையை லிட்டருக்கு 3 ரூபாயும், சமையல் எரிவாயுவின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாயும் மற்றும் மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும் நள்ளிரவு முதல் உயர்த்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி விட்டதால், பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது உயர்த்தி வருகின்றன. பெட்ரோல் விலை ஏற்றம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் சீருந்துகள் (கார்) ஆகியவைகளைப் பயன்படுத்தும் நடுத்தர வர்க்க மக்களை பாதிக்கிறது.
ஆனால், டீசல் விலை உயர்வு, ஏழை, எளியோர் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக பாதிக்கும். சரக்குகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பெரும்பாலும் தரை வழியாக லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. டீசல் விலை ஏற்றத்தினால் சரக்கு போக்குவரத்திற்கான கட்டணம் பல மடங்கு உயரும்.
இது, அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக, ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதித்து விடும். விலைவாசி உயர்வினால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த டீசல் விலை உயர்வினால் அனைத்துப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் உயர்ந்து விடும்.
மக்களின் வருவாய் உயராமல் விலை மட்டும் உயர்ந்தால் எப்படி?
மக்களின் வருவாய் ஒரே அளவில் இருக்கும் நிலையில், இது போன்ற டீசல் விலை உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வை மக்களால் எப்படி எதிர் கொள்ள இயலும்? அனைத்து தரப்பு மக்களும் எரிபொருளாக பயன்படுத்தும் சமையல் எரிவாயுவும் சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வளவு அதிகமான விலை உயர்வை மக்களால் தாங்க இயலாது. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் மண்எண்ணெய் விலையும் லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். ஒட்டு மொத்த விலைவாசி உயர்வு உள்ள இந்த நிலையில், இந்த மண்எண்ணெய் விலை ஏற்றம் ஏழை, எளிய மக்களை மிகவும் வாட்டி வதைக்கும்.
மதிப்புக் கூட்டு வரியை குறைக்க முடியாது
எனவே, டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய்க்கான விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்த விரும்புகிறேன். டீசல் மீதான கலால் வரி 2 சதவீதம், கச்சா எண்ணெய் மீதான சுங்க வரி 5 சதவீதம் என சொற்ப அளவில் கலால் மற்றும் சுங்க வரி குறைக்கப்பட்டு, அதைப் போன்று மாநில அரசால் விதிக்கப்படும் மதிப்பு கூட்டு வரி குறைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு, மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக அதிகம் செலவிடுவது மாநில அரசுதான். மாநில அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிப்பது மதிப்பு கூட்டு வரி மட்டும்தான். எனவே, டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய் ஆகியவற்றின் விலையை மிக அதிகமாக உயர்த்தியுள்ள மத்திய அரசுக்கு, வரியைக் குறைக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
Nov18th 2011 – விலை உயர்வுக்கு என்ன காரணம்?: முதல்வர் விளக்கம்
ஆவின் பால் விலை, பஸ் கட்டணம், ஆகியவற்றை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. அதற்கான காரணங்களை முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா விளக்கியுள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:
கடந்த சட்டசபை தேர்தலில், மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்று, தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றன்பின் ஒன்றாக எனது அரசு நிறைவேற்றிக்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில், துறை வாரியாக நடந்த ஆய்வுக் கூட்டங்களின்போது, மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் கடும் கடன் சுமை காரணமாகவும், நிதி நெருக்கடி காரணமாகவும் முடங்கும் அபாயத்திற்கு வந்துள்ளது தெரிந்தது.
முந்தைய அரசு, மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. வெளிச்சந்தையில் அதிகவிலை கொடுத்து மின்சாரம் வாங்கியதால், மின்வாரியத்தின் கடன் சுமை வெகுவாக உயர்ந்துவிட்டது. அதேபோல், போக்குவரத்துத் துறையையும் தி.மு.க., அரசு சரிவர கையாளவில்லை. போக்குவரத்துக் கழகங்களின் சொத்துக்கள் அனைத்தும், வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு, மக்களின் சிரமத்தை எண்ணிப் பார்க்காமல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே இருக்கிறது. 2001ம் ஆண்டு, லிட்டருக்கு 18 ரூபாய் 26 காசுகளாக இருந்த டீசல் விலை, தற்போது 43 ரூபாய் 95 காசுகளாக உயர்ந்துவிட்டது. டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரிபாகங்களின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டன. இதனால், போக்குவரத்துக் கழகங்களின் ஒட்டுமொத்த கடன், 6,150 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது.
போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலை இருப்பதால், ஊழியர்களின் சம்பளத்திற்காக மாதம்தோறும், அரசு, 60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலைமைகளை மாற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால், பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதேபோல், ஆவின் நிறுவனத்தின் நிலைமையும், முந்தைய அரசின் தவறான நடவடிக்கையால் மோசமடைந்துவிட்டது. 2006ம் ஆண்டு வரை லாபம் ஈட்டி வந்த ஆவின், 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருகிறது. கொள்முதல் செய்யும் பாலுக்கு, 45 நாட்கள் கழித்தும் பணம் கொடுக்க முடியாத துர்பாக்கிய நிலையில் ஆவின் நிறுவனம் உள்ளது. கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு, லிட்டர் ஒன்றுக்கு நான்கு ரூபாய் அளவிற்கு நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
இதனால், 22 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்துவந்த ஆவின் நிறுவனம், தனது கொள்முதலை குறைத்துக்கொள்ள வேண்டிய மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு பணம் தருவதற்காக, எனது அரசு, ஆவின் நிறுவனத்திற்கு மாதம், 17 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. தனியார் நிறுவனங்களை விட, ஆவின் பால் மிகவும் குறைவான விலைக்கு விற்பதன் மூலம், பொதுமக்கள் அடையும் பயனை விட, இடைத்தரகர்கள் தான் அதிகளவில் பயன் பெறும் நிலை ஏற்பட்டுவிட்டது.
இந்தச் சூழ்நிலையில் தான், மக்கள் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு, தற்போது திவாலாகும் நிலையில் உள்ள மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை மீட்டெடுக்கும் வகையில், இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கட்டண உயர்வு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மேலோட்டமாக பார்த்தால், அவை பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தாலும், முடிவுகள் எடுக்கப்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால், அவ்வாறு அல்ல என்பது விளங்கும். பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து செயல்பட வைக்க, மக்களாகிய உங்களிடம் வராமல், நான் வேறு யாரிடம் சென்று உதவிகேட்க முடியும்? தமிழகத்தை சீரமைக்க, மத்திய அரசு ஓரளவுக்கு உதவி செய்யும் என்று, ஆறு மாதங்களாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு, தமிழகத்தை அடியோடு புறக்கணித்து, கைவிட்டுவிட்ட நிலையில், எனது அருமை மக்களாகிய உங்களிடம் வராமல், நான் வேறு எங்கே செல்ல முடியும்? எனவே, தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை நீங்கள் ஏற்றுக்கொண்டு, உங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மே. வங்கத்திற்கு மட்டும் மத்திய அரசு அள்ளித் தருவதால்தான் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது-ஜெ.
சென்னை: தமிழகம் கோரிய நிதியில் ஒரு துளியைக் கூட மத்திய அரசு தரவில்லை. ஆனால் தனது அரசுக்கு ஆதரவு தரும் திரினமூல் காங்கிரஸ் ஆட்சி புரியும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இதன் காரணமாகவே தமிழகத்தில் பால், பஸ் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
பஸ் கட்டணம், பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்து ஜெயா டிவியில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
அவர் பேசும்போது,
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு தற்போது திவாலாகும் சூழ்நிலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றை மீட்டெடுப்பது குறித்தும், அந்த நிறுவனங்கள் தங்களது இன்றியமையாப் பணியை மக்களுக்கு தொடர்ந்து செவ்வனே ஆற்றுவதற்கான வழிவகைகள் குறித்தும் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, “வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும்” என்ற பழமொழிக்கேற்ப சில முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு எனது தலைமையிலான அரசு தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மேலோட்டமாக பார்க்கும் போது, அவை பொதுமக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தாலும், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதற்கான காரண காரியங்களை ஆராய்ந்து பார்த்தால், அது அவ்வாறு அல்ல என்பது விளங்கும். முற்றிலுமாக முடங்கிப் போயுள்ள நிறுவனங்களை கைதூக்கி விடவில்லை என்றால், இந்த நிறுவனங்களின் சேவைகள் மக்களுக்கு கிடைக்காமலே போய்விடும்.
டீசல் போன்ற பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திக் கொண்டே செல்கின்ற நிலையில், சிறப்புக் கடன் உதவி என்ற வகையில், மத்திய அரசு தமிழகத்திற்கு ஒரு ரூபாயைக் கூட அளிக்காத நிலையில், மத்திய தொகுப்பிலிருந்து மாநில அரசு கோரிய 1000 மெகாவாட் மின்சாரத்தை கூட வழங்காத நிலையில், தமிழக அரசே ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த பொதுத் துறை நிறுவனங்களை தொடர்ந்து செயல்பட வைக்க தமிழக மக்களாகிய உங்களிடம் அல்லாமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்?
கடனில் மூழ்கியிருக்கும் தமிழ்நாடு கேட்ட உதவித் தொகையில் ஒருரூபாயைக் கூட மத்திய அரசு தரவில்லை. அதேசமயம், தனது அரசுக்கு ஆதரவு தரும் கட்சியான திரினமூல் காங்கிரஸ் ஆட்சி புரியும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் ரூ. 21,614 கோடியை அள்ளித் தந்துள்ளது.
எத்தனை முறை கேட்டாலும், தமிழ்நாட்டிற்கு உதவி செய்ய மத்திய அரசு மறுக்கும்போது, தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல், நான் வேறு யாரிடம் சென்று உதவி கேட்க முடியும்? முந்தைய மைனாரிட்டி திமுக அரசு, தமிழ்நாட்டை முற்றிலுமாக சீரழித்துவிட்டு, கடனாளி ஆக்கிவிட்டு, திவாலாகும் நிலைக்கு தள்ளிவிட்ட சூழ்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, தமிழக மக்களாகிய நீங்கள், ஆட்சிப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள்.
கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், தமிழ்நாட்டை சீரமைக்க, மத்திய அரசு ஓரளவிற்காவது உதவி செய்யும் என்று எதிர்பார்த்து கடந்த 6 மாத காலமாக நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.
ஆனால், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தமிழ்நாட்டை அடியோடு புறக்கணித்து, கைவிட்டுவிட்ட நிலையில், எனதருமை தமிழக மக்களாகிய உங்களிடம் வராமல் நான் வேறு எங்கே செல்ல முடியும்?
எனவே, தவிர்க்க முடியாத இந்த உயர்வுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டு உங்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஜெயலிலதா.
தமிழக மக்களின் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வகையில் 2011-12-ம் நிதி ஆண்டுக்கு ரூ.23,535 கோடி நிதியை மத்திய திட்டக் குழு தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது.
மாநில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மத்திய திட்ட குழு டெல்லியில் நேற்று நடைபெற்றது. திட்ட குழு துணை தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா, நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தின் நடப்பு நிதியாண்டு திட்டப்பணிகளுக்காக ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யும்படியும், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதற்கான புதிய தொலை நோக்கு திட்டம் பற்றியும் கூட்டத்தில் அவர் விளக்கினார்.
கூட்டத்தின் முடிவில், தமிழக ஆண்டு திட்டப்பணிகளுக்காக, ரூ.23 ஆயிரத்து 535 கோடி ஒதுக்கீடு செய்ய திட்ட குழு ஒப்புதல் அளித்தது. இந்த தொகை ஜெயலலிதா கேட்டதை விட ரூ.535 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு திட்ட ஒதுக்கீட்டை விட ரூ.3,467 கோடி அதிகமாகும்.
தமிழக அரசு கேட்டதை விட கூடுதலாக நிதி ஒதுக்கிய திட்ட குழு துணை தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியாவுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த கூட்டம் முடிந்ததும் ஜெயலலிதா விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ 6.25 உயர்த்தப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். இதனால் லிட்டருக்கு ரூ.24 ஆக இனி உயரவுள்ளது.
இதுகுறித்து ஜெயலலிதா கூறுகையில்,
பசும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 18 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக உயர்த்தவும், எருமைப் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கொள்முதல் விலையை 26 ரூபாயிலிருந்து 28 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் ஏற்கெனவே பெருத்த நட்டத்தை எதிர்கொண்டு வருவதையும், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதையும் கருத்தில் கொண்டு; அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் சமன்படுத்திய பாலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 17 ரூபாய் 75 பைசாவிலிருந்து
24 ரூபாயாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
பால் விலை உயர்வு: ஜெயலலிதா சொல்வது பொய்- கருணாநிதி!
வெள்ளி, 14 மார்ச் 2008 – பால் விலையைப் பொறுத்தவரை ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் இரண்டு மோசடிகளைச் செய்த பெருமைக்குரியவர். இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று கருதிக் கொண்டு அறிக்கையிலே எப்போதும் போல் பொய் புராணம் தீட்டியிருக்கிறார் ஜெயலலிதா என்று முதலமைச்சர் கருணாநிதி குற்றம் சாற்றியுள்ளார்
இது குறித்து முதலமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள கேள்வி, பதில் அறிக்கையில், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பாலின் கொள்முதல் விலையை மட்டுமே, தான் உயர்த்தியதாகவும், விற்பனை விலையை உயர்த்த வில்லை என்றும் அறிக்கை கொடுத்திருக்கிறாரே?
இது முழு பூசணிக்காயை இலைச் சோற்றிலே மறைக்கும் மோசடி என்று அந்தத் துறையின் அமைச்சர் மதிவாணன் விளக்கமாகச் சொல்லியிருந்த போதிலும் அது பல ஏடுகளிலே வெளி வரவில்லை. பால் விலையைப் பொறுத்தவரை ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் இரண்டு மோசடிகளைச் செய்த பெருமைக்குரியவர்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொள்முதல் விலையை உயர்த்தாமலேயே விற்பனை விலையை மட்டும் உயர்த்திய நிகழ்ச்சி நடைபெற்றதுண்டு. 1.7.1993ல் கொள்முதல் விலையை ஒரு பைசா கூட உயர்த்தாமலேயே, விற்பனை விலையை மட்டும் லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் உயர்த்தியவர் தான் ஜெயலலிதா.
1991-96ம் ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியிலே இருந்த போது பசும்பால் கொள்முதல் விலை 2 ரூபாய் 26 காசு அளவிற்கு உயர்த்தப்பட்டது. ஆனால் நுகர்வோரிடம் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் என்று உயர்த்தி விற்பனை செய்ய ஆணை பிறப்பித்தவர் தான் ஜெயலலிதா.
அடுத்து கொள்முதல் விலையை குறைந்த அளவிற்கு உயர்த்தி விட்டு, விற்பனை விலையை அதிக அளவிற்கு கூடுதலாக நிர்ணயம் செய்ததற்கு உதாரணம் கூற வேண்டுமேயானால், 1.12.2001 அன்று கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ஐம்பது பைசா மட்டுமே உயர்த்தி விட்டு, விற்பனை விலையை லிட்டர் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் அளவிற்கு உயர்த்தியவர் தான் ஜெயலலிதா.
இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று கருதிக் கொண்டு அறிக்கையிலே எப்போதும் போல் பொய் புராணம் தீட்டியிருக்கிறார் ஜெயலலிதா என்று முதலமைச்சர் கருணாநிதி குற்றம் சாற்றியுள்ளார்.