கண்ணில் பட்டவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார் கோத்தபயா- ராணுவ தளபதி

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தின்போது கண்ணில்படும் யாரையும் விடாமல் அவர்களை, சுட்டுத்தள்ள ராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாகவும், இந்த அதிகாரத்தை பாதுகாப்புத் துறை செயலாளரான கோத்தபயா ராஜபக்சே பிறப்பித்திருந்ததாகவும் ராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறியதாக சேனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஈழப் போரின்போது நடந்த படு பாதக செயல்களை இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் டாக்குமென்டரியாக இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. அது தற்போது மேலும் சில புதிய செய்திகளை வெளியிட்டுள்ளது.

பெயர் சொல்ல விரும்பாத 2 இலங்கை ராணுவ வீரர்கள் கூறியதாக அந்த சேனல் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது சரண் அடைந்த விடுதலைப் புலிகளை சுட்டுத்தள்ளுமாறு அந்நாட்டு பாதுகாப்பு செயலாளரும், அதிபர் ராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபயா ராஜபக்சே தான் உத்தரவிட்டார் என்று ஒரு வீரர் தெரிவித்தார்.

கோத்தபயா ராஜபக்சே தான் தமிழ் ஈழத் தலைவர்களைக் கொல்லுமாறு ராணுவத் தளபதி சவேந்திரா சில்வாவுக்கு உத்தரவிட்டுள்ளார் என்றார் இன்னொரு வீரர்.

கண்ணில் படுபவர்களையெல்லாம் எப்படியெல்லாம் தீர்த்துக்கட்ட முடியுமோ அப்படியெல்லாம் செய்யுங்கள் என்று ராணுவ வீரர்களுக்கு உத்தரவு வந்துள்ளது. இதையடுத்துத் தான் மக்களை கண்மூடித்தனமாக கொன்றுள்ளனர்.

யாரையும் கொல்லவில்லையாம்-சொல்கிறது இலங்கை

ஐ.நா நிபுணர் குழு சமர்பித்த அறிக்கையில் இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரில் லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ராஜபக்சே அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கோத்தபயா யாரையும் கொல்லுமாறு உத்தரவிடவில்லை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. சேனல் 4 வெளியிட்ட வீடியோக்கள் பொய் என்று ராஜபக்சே தெரிவித்திருந்தார்.