ஈழ தமிழர் படுகொலைப் புத்தகம் பறிமுதல்: இலங்கை அரசுக்கு கண்டனம்

கரூர்: சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு அனுப்பப்பட்ட “என்ன செய்யலாம் இதற்காக? ” எனும் ஈழ இனப் படுகொலைப் புத்தகத்தை பறிமுதல் செய்த இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து நூலாசிரியர் ஜெ. பிரபாகரன் மற்றும் மதுரை பென்குயின் பதிப்பகம் சார்பில் அ.சரவணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

கடந்த மே 9-ம் தேதி சென்னையில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்கு “என்ன செய்யலாம் இதற்காக?” எனும் ஈழ இனப் படுகொலைப் புகைப்பட ஆவணத்தின் 1000 பிரதிகள் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த புத்தகங்களை இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தில் சட்டவிரோதமாக பறிமுதல் செய்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்பட்ட இந்தியாவிலும் சரி, இறக்குமதியாகவிருந்த கனடாவிலும் சரி இது தடை செய்யப்பட்ட ஆவணம் அல்ல.

கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி அன்று இந்தியாவில் சென்னையிலும், கடந்த மார்ச் 13-ம் தேதி அன்று கனடாவில் டொரண்டோ நகரிலும் இந்த நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்விரு நாடுகளில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றுக்கும் இந்நூல் சென்றடைந்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி இந்நூல் ஆர்வலர்களால் நூல் அறிமுக நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மேலும், ஐ. நா. நிபுணர் குழு, டப்ளின் தீர்ப்பாயக்க்குழு உறுப்பினர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பல நாடுகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அனைவருக்கும் இந்நூல் உலகம் முழுவதும் உள்ள மனித நேய ஆர்வலர்களால் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

350-க்கும் மேற்பட்ட 60 ஆண்டு கால ஈழ இனப் படுகொலைப் புகைப்படங்கள் கொண்ட இந்த ஆவணம், பார்ப்பவர்களின் மனதில் மனித நேயத்தை தூண்டும் மனித நேய நூலாக இருப்பதால் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இந்நூல் தடைசெய்யப்படவில்லை.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இந்நூல் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தினமணி, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன், குமுதம், இந்தியா டுடே, சண்டே இந்தியன், உயிர்மை, புதிய பார்வை உள்ளிட்ட தமிழகத்தின் 30-க்கும் மேற்பட்ட இதழ்கள் நூலை வரவேற்று தமது கருத்தை பதிவு செய்துள்ளன.

தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சியினர், தமிழ்த் திரைத் துறையினர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், காந்தியவாதிகள், அனைத்து மத குருமார்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்நூலை பெரிதும் வரவேற்றுள்ளனர்.

எனவே இந்தியாவிலும், கனடாவிலும் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வரவேற்பு பெற்றுள்ள இந்நூலை இந்திய சுங்கத்துறை அனுமதியுடன் கனடாவுக்கு செல்லும் வழியில் பறிமுதல் செய்ய இலங்கை சுங்கத் துறையினருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.

இது இந்திய, கனடா மக்களின் கருத்து சுதந்திர உரிமையை இலங்கை அரசு பறிக்கும் செயலாகும் என தெரிவித்து இலங்கை மீது வழக்கு தொடர வேண்டும் என்று சட்ட நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, சட்ட விரோதமாக பறிமுதல் செய்த நூலை இலங்கை அரசு உடனே விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தங்களது அறிக்கையில் கூறியுள்ளனர்.